முக ஒப்பனைக்காக சென்ற 17 வயது சிறுவனுக்கு ஸ்டீமீங் இயந்திரத்திலிருந்து அதிக வெப்பத்துடன் வந்த நீராவியால் சிறுவனின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் “ராக் மென்ஸ் சலூன்’ என்ற பெயரில் சஞ்சய்தாஸ் என்பவர் சிகை அலங்காரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வித்யாதரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கு கடந்த 13-ம் தேதி 17 வயது சிறுவன் ஃபேசியல் செய்வதற்காக வந்துள்ளார். ஃபேசியல் செய்வதற்கு ஸ்டீமிங் மிஷினில் முகத்தை வைத்த பொழுது, அதிக வெப்பத்துடன் வெளியான நீராவியால் சிறுவனுடைய முகத்தின் ஒரு பகுதி வெந்து காயமடைந்தது.
சிறுவன் வலியில் துடிக்க, உடனடியாக இயந்திரத்தை நிறுத்திய வித்யாதரன் கடை உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த சிறுவனின் தந்தையிடம், மருத்துவச்செலவை ஏற்றுக் கொள்வதாக கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்ததால், சிறுவனின் தந்தை இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காயம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர் வித்யாதரன் ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.







