29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம்; என்னதான் நடக்கிறது மணிப்பூரில்?

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோவை ஒளிபரப்ப  அரசு தடை விதித்துள்ளது. மணிப்பூர் வீடியோ நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மாநிலத்தில் என்னதான் நடக்கிறது? 

கர்நாடக தேர்தலும், கேரளா ஸ்டோரி படமும் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இருந்த நேரத்தில்தான் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அதுவரை மணிப்பூர் வன்முறை குறித்த எந்த செய்திகளும் கவனம் பெறத் தொடங்கவில்லை. பிரபல குத்துச் சண்டை வீராங்கணையான மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது மாநிலம் பற்றி எரிகிறது…மோடி, அமித்ஷா ஆகியோர் உதவுங்கள்” என குறிப்பிட்டிருந்தார். மேரிகோமின் இந்த ட்வீட்டிற்கு பிறகுதான் மணிப்பூர்  வன்முறை குறித்து உலகம் பேசத் தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மணிப்பூர் வன்முறை : அடிப்படை காரணம் என்ன..?

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் மூன்று முக்கிய இனக்குழுக்களான நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மேதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இந்த பேரணியில்தான் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று மைதேயி இன மக்களின் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் படிப்படியாக வன்முறையாக மாறியது.

மணிப்பூரில் நாகா மற்றும் குக்கி இன பழங்குடி மக்கள் 40% க்கும் மேல் வசித்து வருகின்றனர். பழங்குடி அல்லாத மைதேயி இன மக்கள் இம்பாலைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் பெருமளவில் வசித்து வருகின்றனர். ஆனால் பழங்குடி மக்களான நாகா மற்றும் குக்கி இன மக்கள் மலைகிராமங்களை சுற்றி வாழ்ந்து வருகின்றன. மாநிலத்தின் விரிவாக்க பணிகளுக்கு மலைகிராமங்களில் இருந்து குக்கி இன மக்களை அரசு வெளியேற்ற முற்பட்டதும் தொடர் போராட்டத்திற்கான ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இணைய சேவை முடக்கம் , ஊரடங்கு, துப்பாக்கிச்சூடு :

இரண்டு குழுக்களுக்கும் ஏற்பட்ட வன்முறை கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பழங்குடி மக்களாக இருக்கிற நாகா மற்றும் குக்கி இன மக்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்கள், மைதேயி இன மக்கள் பெறும்பாலும் இந்து மதத்தை பின்பற்றக்கூடியவர்கள்.

கடந்த மே மாதம் 4ம் தேதி கலவரம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் வன்முறை தொடர்பாக போலி வீடியோக்கள் பரவுவதால் இணைய சேவை முடக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. கலவரத்தின் தீவிரம் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே இருந்ததால் கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

மணிப்பூர் வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவலர்கள் சுட்டுக் கொலை, ஆயுதங்கள் கொள்ளை!

மணிப்பூர் வன்முறையில் பொதுமக்கள் பலர் உயிரிழந்த நிலையில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 2 காவலர்களும் வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த வன்முறையின் போது காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களிடம் இருந்து பல ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டக்கள் போன்றவை வன்முறையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக  குற்றம்சாட்டப்பட்டது. கலவரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்குமாறு மாநில முதல்வர் உட்பட பல தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இம்பால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுசிந்த்ரோ மேதேயி தனது வீட்டின் அருகே ஒரு பெட்டி ஒன்றை வைத்தார். அதில் காவல் நிலையங்களில் இருந்து எடுத்துச் சென்ற ஆயுதங்களை தயக்கமின்றி இந்த பெட்டியில் போடுங்கள் என எழுதி ஒட்டியிருந்தார். இதனை ஆங்கிலம் மற்றும் மேதேயி மொழியில் எழுதியிருந்தார்.

இதன் பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட  130க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் அந்த பெட்டியில் திரும்ப கிடைத்துள்ளன.

உள்துறை அமைச்சர் நேரில் சந்திப்பு : அமைதிக் குழு அமைப்பு ..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை 3 நாட்கள் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா “ இந்த  கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி மணிப்பூரில் அம்மாநில ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தக் குழுவில் மணிப்பூர் மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.

தணியாத பதற்றம் : அமைச்சர் வீடு தீ வைப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீடு வன்முறையாளர்களால் தீவைக்கப்பட்டது.  பாஜக அமைச்சரான  ஆர்.கே.ரஞ்சன் சம்பவம் நடைபெற்ற போது கட்சிப் பணிகளுக்காக கேரளா மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்தார். அமைச்சர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வன்முறையாளர்கள் அவரது வீட்டிற்கு தீவைத்தனர்.

அதே போல மணிப்பூர் மாநில பொதுப்பணித் துறை அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான கோவிந்தாஸின் வீடு வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டுள்ளது. அவரது வீடு பீஷ்னுபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வன்முறையாளர்கள் அவரது வீட்டை தீவைக்கும் வீட்டில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு :

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்ற்ச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, மணிப்பூர் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பலர் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜூன் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை “மான்கிபாத்” நிகழ்ச்சியில் வானொலியில் பேசிய பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் மான்கிபாத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என மணிப்பூர் மக்கள் வானொலியில் வீதியில் போட்டு தீ வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் சார்பில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

“மணிப்பூரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சிறுபான்மையினர், அவர்களது உரிமைகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அங்கு நடைபெறும் வன்முறை இனரீதியாகவும், மதரீதியாகவும் நடைபெறுகிறது. முக்கியமாக ஹிந்துக்கள் அதிகமுள்ள மைதேயி இனத்தினருக்கும், கிறிஸ்தவத்தை பின்பற்றும் குகி இன மக்களுக்கும் இடையே இந்த வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறையால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுச் சொத்துகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய விதத்தில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டம் மாநிலத்தில் இருந்து திரும்ப பெறப்பட வேண்டும். அந்த மாநிலத்தில் இணைய சேவையினை மீண்டும் தொடங்க வேண்டும்” இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

வைரலான பழங்குடி பெண்களின் வீடியோ:

இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.

இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவிய காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading