எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் மிக முக்கியமானது கிராமப்புற வளர்ச்சி. கிராமப்புறப் பிரச்சினைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு ஆண்டும் தொகுதிக்காக ஒதுக்கப்படும் ரூ.5 கோடி நிதி மூலமாக பல்வேறு பணிகள் ஊரகப் பகுதியில் நிறைவேற்றப்படுகிறது.
பொதுமக்கள் அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் நோக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, மனம் – மனநலத்தை மேம்படுத்துதல், காசநோய் இறப்பில்லாத் திட்டம், நடமாடும் மருத்துவக் குழு, நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது. pic.twitter.com/ax5kmrKqVL
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 21, 2022
தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில், மாநிலத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 27 இலட்சத்து, 774 குழந்தைகள், 7 இலட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு இச்சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது. ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் மூன்று முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய பிரதமரின் முன்னோடி கிராமத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு ரூபாய் 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களைச் சேர்ந்த 1,357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைகோடி மக்களையும் சென்றடையவேண்டும் என்பதே நமது நோக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.