உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் 500-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி, உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடங்கி 500 நாட்கள் ஆகிறது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது… இன்னும் போர் முடிவடையும் அறிகுறிகள் தென்படவில்லை. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் புடினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன…. பின்னர் ஜெலென்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. உக்ரைன்-ரஷ்யா போரில் இதுவரை 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதில் இறந்தவர்களில் 500 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது. உண்மையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். அதோடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பெருமளவு உக்ரைன் பொது மக்களும், வீரர்களுமே பாதிக்கப்பட்டிருந்தாலும், ஜூலை 7 ஆம் தேதி வரை, 232,000 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 63 மில்லியன் உக்ரேனியர்கள் அகதிகளாகவும், 60 மில்லியன் பேர் வீடற்றவர்களாகவும் மாறியுள்ளனர். இருப்பினும்,18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டிலேயே இருக்கும்படி அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், இதுவரை உக்ரைனின் 17 சதவீத நிலப்பரப்பு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைவு தான். இப்போது ரஷ்யா – உக்ரைன் போர் என்பது பெயரளவில் மட்டுமே இருந்தாலும், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் போன்ற சூழல் நிலவுகிறது. அதன் வெளிப்பாடே ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. ஏன் சமீபத்தில் கூட அமெரிக்கா, உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதனால், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் உக்காரனில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்குமாம். கடந்த மார்ச் மாதம் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, உக்ரைனில் தொழில் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுவரை 11.3 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வேளாண் துறையில் 8.7 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்புகளால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய 411 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ள நிலையில், கீவ் பொருளாதாரப் பள்ளியின் கணிப்பின் படி உக்ரைன் பாதிப்புகள் குறிப்பாக உட்கட்டமைப்பு சேதங்களை சீரமைக்க 143.8 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் தொழில்துறை, வேளாண் துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்ய 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், 500 நாட்களாக ரஷ்ய படைகளை கடுமையாக எதிர்த்து வரும் உக்ரைன் வீரர்களின் துணிச்சலை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார். இது குறித்து மாஸ்கோவின் ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரேனியப் படைகளால் விடுவிக்கப்பட்ட கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் இருந்து பேசிய ஜெலென்ஸ்கி, தீவின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களையும் உக்ரைனின் பிற படைகளையும் தான் பாராட்டுவதாகவும், இந்தத் தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுவது உக்ரைன் அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் மீண்டும் கைப்பற்றும் என்பதற்கு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி, உக்ரைன் மீது படையெடுத்த முதல் நாளில், கருங்கடலில் உள்ள குட்டித் தீவான பாம்பு தீவை தான் ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
அதன் பிறகு, ஜூன் 30 அன்று, தீவில் உள்ள ரஷ்ய இராணுவத் தளத்தை உக்ரைன் குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, ரஷ்யா தீவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இதனால் போர் விரைவில் முடிந்து உக்ரைனில் அமைதி திரும்பி விடும் என பலர் எதிர்பார்த்தாலும், நேட்டோவுக்கும் ,ரஷ்யாவிற்கும் இடையே நிலவும் பனிப்போர் முடிவடையாத வரை போர் பதற்றம் தொடர்ந்து நிலவும் என்பதற்கு சான்றாக, கிழக்கு உக்ரைனில் உள்ள லைமன் நகரின் மீது ரஷ்ய ராணுவம் சனிக்கிழமை நடத்திய ராக்கெட் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்றுவரை இருநாடுகள் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்தாலும், ரஷ்யாவின் தாக்குதலை துணிச்சலுடன் உக்ரைன் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா