கரூர் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் எம்.எல்.ஏ மற்றும் மாநகராட்சி மேயர் கலந்து கொண்டு ஈட்டி எறிந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
கரூர் மாவட்டம், தளவாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு
தடகள சங்கம் சார்பாக இந்தியாவின் தங்கமகன் நீரஜ்சோப்ரா 2021-ம் ஆண்டு
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் தங்கப்பதக்கம்
வென்றதை கொண்டாடும் வகையில் இரண்டாவது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி நடை பெற்றது.
இந்த போட்டியில் 16,18 மற்றும் 20 வயதுடைய ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவாக
பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட வீரர்,
வீராங்கனைகள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் மாநகராட்சி
மேயர் கவிதா கணேசன், புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். இவர்கள் விளையாட்டுப் போட்டி தொடங்கி வைப்பதற்காக சென்ற போது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மூவரும் ஈட்டி எறிந்து போட்டியினை தொடங்கி வைத்தனர்.







