இந்தியா-வங்கதேசத்துக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடந்து 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. சுக்மன் கில், கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், 2 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஷகீப் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.இதனால், 12 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அடுத்து அக்சர் பட்டேல் களமிறங்கினார். 7 ரன்கள் எடுத்திருந்த துவக்க வீரர் சுக்மன் கில்லும் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். இதனால், 29 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் முகைதி ஹசன் மிர்சா பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து, ஜெயதேவ் உனாத்கட் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-ம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்திருந்தது. வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது. ஆனால் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அக்சர் படேல் 34 ரன்னிலும், உனத்கட் 13 ரன்னிலும், அடுத்து வந்த ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்திய அணி 74 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர், அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய அஷ்வின் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 42 ரன்கள் குவித்தார். மற்றொரு பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் 29 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.