சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக உள்ளது. பல நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், காலை உணவு, தாயுமானவர் திட்டம் என அனைத்து திட்டங்களாலும் பெருமை. மக்கள் வரியிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு பயனுள்ள திட்டங்களையே செயல்படுத்துகிறோம்.
ஒவ்வொரு குடும்பங்கள் சார்ந்து ஒரு திட்டங்கள் இருக்கும். அவர்களின் கனவை தெரிவிக்கும் வகையில், ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ என கருத்து கேட்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம்? உங்களின் கனவு என்ன? என்ற கேள்விகளை கேட்டு பதில் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம்.
செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும். அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் தீட்டப்படும். 2030-ம் ஆண்டிற்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக ‘உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை வருகிற 9-ந்தேதி பொன்னேரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
11-ந்தேதி முதல் இந்த திட்டம் தொடர்பான இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. இணையதளம் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை சொல்லலாம். இளைஞர்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளோம். அடுத்த மாதம் கருத்துகள் பெறப்பட்டு, மாவட்டம் தோறும் கருத்தரங்கம் நடைபெறும்.” என்று குறிப்படப்பட்டுள்ளது.







