அரிசிக்கு வரி என்பது கொடுமையானது என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் தேர்வில் முதலிடம் பிடித்த 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்
த.வெள்ளையன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
புகையிலைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளை நாங்கள் வியாபாரிகளாக கருதுவது கிடையாது. அப்படி விற்பனை ஏதும் நடைபெற்றால் அதை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முயற்சி எடுக்கும்.
அரிசிக்கு வரி காலகாலமாக இல்லாமல் இருந்தது. அதை நாங்கள் எதிர்ப்போம். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு போன்றவற்றை வணிகர் சங்கப் பேரவை எதிர்க்கும். வரிவிதித்தால் மக்களுக்கு சலுகைகள் செய்ய முடியும். ஆனால் அரிசிக்கு வரி என்பது கொடுமையானது.
இதில் மத்திய-மாநில அரசுகள் திட்டம் போட்டு செயல்படுகிறது. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை போன்று அமைதியான முறையில் காந்திய வழியில் தீவிரப் போராட்டம் வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் என்றார் வெள்ளையன்.








