ஓலா, ஊபர், ராபிடோ போன்றவற்றை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடகை வாகன ஓட்டுநர் தொழிலை பாதுகாத்திட, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் மற்றும் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் இணைந்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கார்ப்பரேட் கம்பெனிகளை ஒழுங்குபடுத்தக்கூடிய புதிய மோட்டார் சட்டம் 2019 மோட்டார் அக்ரிகேட்டர் ரூலை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசே ஓலா, ஊபர் போன்ற செயலியை உருவாக்கி அதில் ஆட்டோ, டூரிஸ்ட் கேப், டாட்டா ஏசி வாகனங்களைப் பதிவிறக்கம் செய்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தின் 3-வது நாளான இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் குப்புசாமி பேசியதாவது:
“ ன்லைன் மூலம் பதிவு செய்து பயணிக்க கூடிய வாடகை வாகன முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசே ஓலா, ஊபர் போன்ற செயலியை உருவாக்கி அதில் ஆட்டோ, டூரிஸ்ட் கேப், டாட்டா ஏசி வாகனங்களை பதிவிறக்கம் செய்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். செய்யாத தவறுக்காக காவல்துறையினர் அபராதம் விதிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்” என கூறினார்.







