தேசிய விருதை எனது அப்பாவுக்கு சமர்பிப்பதாக மதுரை விமான நிலையத்தில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்
கருவறை என்னும் குறும்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார் ஸ்ரீகாந்த் தேவா. இந்தநிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் இன்று மதுரை வந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேசிய விருது குறும்படத்திற்காக வழங்கப்பட்டது. இந்த விருது வாங்கியதற்கு
எங்க அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். ஜனாதிபதி கையில் இந்த விருது வாங்கியது
எனக்கு பெருமையாக உள்ளது.
தமிழனாக இந்த விருது வாங்கியது பெருமையாக உள்ளது. இந்த விருதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க என நேற்று எல்லோரும் கேட்டார்கள். இந்த விருதை எங்க அப்பாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
எங்க அப்பாவிடம் இல்லாத விருதுகளே இல்லை. ஆனால் இந்த விருது அவருக்கு சிறப்பான ஒன்று. நம்ம ரொம்ப கடினமாக உழைத்தால் கண்டிப்பா கடவுள் எல்லாத்தையும் நம்ம கையில கொடுப்பாரு.
எல்லா படத்திற்கும் விருது கிடைக்கும் என்று தான் உழைக்கிறோம். அனைத்து
கலைஞர்களும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது தான் கனவு. 20 படங்களுடன்
போட்டி போட்டு இந்த படம் விருதை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு பணியாற்றும் போது
தேசிய விருது கிடைக்கும் என நினைக்கவில்லை.
இவ்வாறு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார்.







