12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான செய்முறைத் தேர்வுகள் வரும் 16ஆம் தொடங்கி நடைபெறவுள்ளது.
எனினும், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே ஈடுபடுவதால் அடுத்த நாளே பொதுத் தேர்வு பணியிலும் ஈடுபட வேண்டிய சூழலும் உருவானது.
இந்த நிலையில் தமிழக தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுவதால், 3ம் தேதி நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் மே 31ம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.







