இலங்கையிலிருந்து வந்த தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
“உலக அகதிகள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடற்றவர்களாக மாறியவர்களின் நலன்களைக் காப்பதற்காகவும், அவர்களின் துணிச்சலைப் போற்றுவதற்காகவும் தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நிலை?
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில் 90 #ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை அகதிகளாக அறிவிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/draramadoss/status/1538760703409917952
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஈழத்தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி இரு மாதங்களாகியும் அதன் மீது மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் வழங்க முடியவில்லை.
இலங்கையிலிருந்து வந்த தமிழர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும். அவர்களை அகதிகளாக அறிவித்து உதவிகளை வழங்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அகதிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.








