சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் .விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் நெல் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் பயிரிடுதலில் ஆர்வமிக்கவர். அத்துடன் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வரும் இவர் தமிழக நெல் ரகமான 174 உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல் ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1,250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர் சிவரஞ்சனி. இதன் காரணமாக முதலமைச்சர் மாநில விருது இளைஞர் விருதுக்குத் தேர்வாகியுள்ள இவருக்கு சுதந்திர தின விழாவில் விருதும் ,ஒரு லட்சம் பரிசு தொகையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
அதேபோல, சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய வகையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த் ஆகிய இருவருக்கும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆஷிக் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
-ம.பவித்ரா








