“தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தாய் மண் தமிழ்நாட்டின் பொங்கல் விழாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களை காணும்போது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும், தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“Tamil is the umbilical cord that connects us” - Chief Minister M.K. Stalin is proud!

சென்னை நத்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழா 2025 – தாய்த் தமிழ்நாட்டில் தமிழர் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அயலகத் தமிழர் தினவிழாவில் கணியன் பூங்குன்றனார் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழர்களின் பெருமையை விளக்கும் வகையில் வீடியோ உடன் பாடல் ஒளிபரப்பட்டது.

இதைத்தொடர்ந்து விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“உலகின் எந்த பகுதிக்கு போனாலும் தாய்த் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர். அமெரிக்காவில் அயலகத் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் என்றைக்கும் மறக்க முடியாது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர்.

தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. தாய் மண் தமிழ்நாட்டின் பொங்கல் விழாவில் உங்களை காணும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் உழைப்பால் பாலைகளை சோலைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நீங்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை. தமிழ்நாடும் உங்களை மறக்காது.

6 அயலக தமிழ் ஆளுமைகளுக்கு விருதுகளை இன்று வழங்கி சிறப்பித்துள்ளோம். அயலகங்களில் தமிழை வளர்க்கும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்துகிறது. உலகம் முழுவதும் இன்னலுக்கு ஆளாகும் அயலக தமிழர்களை காத்து வருகிறது அயலக தமிழர் நலத்துறை. வேர்களை தேடி என்ற திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் மைல் கல்.

அல்லல்படுவோரின் கண்ணீரை துடைத்து, இன்னலுக்கு ஆளாவோரின் புன்னகையை மீட்டுள்ளோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.