தமிழர் கலைகளை அடுத்த தலைமுறைக்கு அழியாமல் எடுத்து செல்ல வேண்டும் என பரதநாட்டிய கலைஞரும், தமிழக அரசு மாநில திட்டக்குழு உறுப்பினருமான டாக்டர் நர்த்தகி நடராஜ் வலியுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசுக் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கேணிக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பரத நாட்டிய கலையை அரங்கேற்றம் செய்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான பரதநாட்டிய கலைஞரும் பத்மஸ்ரீ விருதாளருமான டாக்டர் நர்த்தகி நடராஜ் பங்குபெற்றார்.
இதைத் தொடர்ந்து நர்த்தகி நடராஜ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், தமிழ்நாட்டில் அழிந்துவரும் கலைகளை பாதுகாக்க, கலை நுகர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், கலைகளில் சிறந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்வதை காட்டிலும், அதனை அடுத்த தலைமுறைக்கு அழியாமல் எடுத்து செல்ல வேண்டும் எனக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் அழிந்து வரும் கலைகளை தற்பொழுது கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் மாணவர்களை தயார் செய்து வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில், ராமநாதபுரம் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.








