தீவிரவாதிகளின் சொர்க்கமாக ஆப்கனிஸ்தான் இருக்காது என்ற வாக்குறுதியை தாலிபான்கள் மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் பதுங்கி இருந்த அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதல் மூலம் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.
இந்த தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் தோஹா ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரிக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் கொடுத்ததன் மூலம் தோஹா ஒப்பந்தத்தை தாலிபான்கள் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தபோது, கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த ஆன்டனி பிளிங்கன், அதில், ஆப்கன் மண்ணில் இருந்துகொண்டு தீவிரவாதிகள் செயல்படுவதற்கும் அவர்கள் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், தாலிபான்கள் அமெரிக்காவை மட்டுமல்லாது உலகையும் ஆப்கன் மக்களையும் ஏமாற்றி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்குறுதியை தாலிபான்கள் நிறைவேற்றாத நிலையில், ஆப்கன் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று ஆன்டனி பிளிங்கன் உறுதி அளித்துள்ளார். மனிதாபிமான உவிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கான உரிமைகள் குறிப்பாக ஆப்கன் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அல் ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதன் மூலம் நீதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.