டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி கெத்து காட்டிய கத்துக்குட்டி அணிகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என்பது இரண்டாம் பட்சமே. தங்களது திறமையை கண்டு சக அணிகள் அஞ்சும் அளவிற்கு விளையாடி இருக்கிறோமா என்பது தான் முக்கியம். இந்த வார்த்தைகளுக்கு, தற்போது நடைபெற்றுவரும் 8வது டி20 உலகக் கோப்பை தொடர் உயிர் கொடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இரண்டு முறை கோப்பையை வென்று சரித்திரம் படைத்த மேற்கிந்திய தீவுகள், அரையிறுதிக்குள் நிச்சயம் செல்லும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளின் கண்ணில் கத்துக்குட்டி அணிகள் விரலைவிட்டு ஆட்டியது நடப்பு உலகக்கோப்பை கோப்பையின் சுவராஸ்ய சுவடுகளாக அமைந்துள்ளன.
கத்துக்குட்டி அணிகள் என கிண்டலடிக்கப்படும் நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் கோப்பைகளை வெல்ல வேண்டும் எனற பலம் வாய்ந்த அணிகளின் கனவை சுக்குநூறாக்கி தங்களை கில்லாடி அணிகள் என நிரூபித்துள்ளன.
சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும், முதல் போட்டியிலேயே நடப்பு ஆசிய கோப்பையை வென்ற களிப்பில் களம் இறங்கிய இலங்கையையும், இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வென்று நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் தங்களது இருப்பை அழுத்தமாக பதிவு செய்தன.
மறுபுறம், சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது மட்டுமின்றி, டி-20 ஜாம்பவான் என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியை வெளியேற்றி அந்த அணிக்கு சோக வரலாறு உருவாக காரணமாக அமைந்தது அயர்லாந்து. அரையிறுதிக்குள் நுழைந்தது மட்டுமின்றி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றிபெற்று அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததையும் யாராலும் மறக்க முடியாது.
குறிப்பாக, இந்த தொடரில் பெரிதும் சோபிக்காத ஆப்கானிஸ்தான் அணி, கடைசி போட்டியில், ஆஸ்திரேலிய அணியோடு போராடி தோல்வி அடைந்தாலும், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை பகல் கனவாக்கியது.
குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணியை யாரும் எதிர்பாராதவிதமாக வீழ்த்தியதோடு மட்டுமின்றி, தொடரில் இருந்து வெளியே அனுப்பியது நெதர்லாந்து அணி. தென்னாப்பிரிக்க அணியின் இந்த தோல்வியால், முன்னதாக ஜிம்பாப்வே அணியிடம் சரணடைந்த பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
அதுமட்டுமல்ல, நடப்பு தொடரின் தற்போதைய நிலவரப்படி, அதிக ரன்கள், விக்கெட்டுகள், சிக்சர்கள் என அனைத்து பட்டியலிலும் சிறிய அணிகளை வீரர்கள் முதல் 5 இடங்களில் உள்ளனர். உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்புவரை கத்துக்குட்டிகள் என்று விமர்சிக்கப்பட்ட இந்த அணிகள், தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று கர்ஜித்தபடி வீறுநடை போட்டு நாடு திரும்பி இருக்கின்றன.