கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வேகமாக பரவி வரும் தக்காளி வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரத்தை காணலாம்.
கொரோனா வைரஸின் நான்காவது அலைக்கு மத்தியில் தற்போது குழந்தைகளை குறிவைத்து தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. கேரளாவில் தற்போது 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு அதீத காய்ச்சலுடன் உடலில் சிறிய தடிப்புகள் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சலின் பக்கவிளைவு காரணமாக ஏற்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு வாயில் எரிச்சல், கை மற்றும் கால்களில் நிறமாற்றம் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிகுறிகள் காணப்படுவோர் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், அதிகளவில் நீரை பருகவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உடலில் ஏற்பட்டுள்ள தடிப்புகளை தொடக்கூடாது என்றும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். கேரளாவில் பரவி வரும் தக்காளி வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ், ஏற்கனவே சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒருவகை தொற்று எனவும், நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவால் இந்த வைரஸ் பரவுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.