ஸ்வாதி மாலிவால் வழக்கு – பிபவ் குமாருக்கு 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை காண எம்.பி ஸ்வாதி மாலிவால் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் தன்னை அடித்து, உதைத்ததாக ஸ்வாதி மாலிவால் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள், பாஜக என பல கட்சிகள் தங்கள் கண்டத்தை தெரிவித்தன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அக்கட்சியின் அமைச்சர் அதிஷி மறுப்பும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கடந்த 18ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் பிபவ் குமார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவரின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில், தனக்கு எதிரான கைது நடவடிக்கையை கண்டித்து பிபவ் குமார் தாக்குதல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.இதனையடுத்து மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.