“கமல் சாராலதான் சினிமாவுக்கு வந்தேன். அவர் போட்டுக்கொடுத்த பாதையில தான் போய்ட்டிருக்கேன். நான் இப்போ பண்ணிட்டிருக்க எல்லாமே அவர பாத்துதான்” இதெல்லாம் சொன்னது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்று உங்களுக்கு தோன்றலாம். வார்த்தை மாறாமல் பல ஆண்டுகளுக்கு முன்பே இதே வார்த்தைகளால் கமலுக்கு அர்ச்சனை செய்தவர் தான் நடிகர் சூர்யா. மேலும் ‘சகலகலா வல்லவன் தியேட்டர்ல பாத்ததுலருந்து இன்னைக்கு நான் சினிமாவுக்கு வந்து 20 வருஷம் மேல ஆகிடுச்சி இப்பவரை கமல் சார் மேல இருக்க அந்த பிரம்மிப்பு குறையல’ என்றும் அவர் பல இடங்களில் குறிப்பிட்டார்.
சூர்யாவின் அறையில் என்னுடைய புகைப்படங்களை விட கமலின் புகைப்படங்களே அதிகம் இருக்கும். அதுவும் கமலின் போட்டோவுக்கு மேலே ‘தெய்வமே!’ என்று எழுதியிருக்கும் எனவும் சூர்யாவின் தந்தை சிவகுமார் கூறியுள்ளார். இப்படி ஆண்டாண்டு காலமாக அணு அணுவாக ரசித்த தன்னுடைய தலைவர் கமல் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதே இன்றைய வைரல் செய்தி.
விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என்று உச்சநட்சத்திரங்கள் நடிக்க தற்போது சூர்யாவும் அப்படத்தில் ஒரு சிறிய மற்றும் முக்கியமான காட்சிகளில் நடிக்கிறார் என்று தகவல் வந்து கொண்டிருக்கிறது.
படப்பிடிப்புகள் முடிவடைந்திருந்தாலும் சூர்யா நடிக்கும் முக்கிய காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணூர் துறைமுகத்தில் காட்சியாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா வரும் போது அவரை ஆரத்தழுவி கமல் வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.சூர்யா நடிக்கும் அந்த காட்சியில் கமல் இருக்கமாட்டார் எனவும், சூர்யாவை வரவேற்பதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு கமல் வந்தார் எனவும் கூறப்படுகிறது. ‘கைதி’ படத்தில் வில்லன்களாக கலக்கிய அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் சூர்யாவுடனான இந்த காட்சியில் இடம் பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி மற்றொரு சூடான செய்தியும் உலா வருகிறது. விக்ரம் படத்தின் கிளைமாக்ஸில் இருந்தே கைதி படத்தின் இரண்டாம் பாகம் தொடரப்படுகிறதாம். மேலும், விக்ரம் மற்றும் கைதியின் கதைக்களங்கள் ஏதோ ஒரு ‘நாட்’ஐ கொண்டு இணைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
பல்வேறு நட்சத்திரப் பட்டாளங்களை தொடர்ந்து சூர்யாவும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறார் எனும் செய்தி அப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் 3ம் தேதி கோலிவுட்டே கோலாகலமாக மாறப்போகிறது என்று சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisement: