இட ஒதுக்கீடு வழக்குகளில் தீர்ப்பு வரும்வரை மருத்துவ மேல்படிப்புக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மேல்படிப்புகளான எம்டி, எம்எஸ் போன்றவற்றிற்கான இடங்கள் நீட் தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு கடந்த 11ம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்து மேல்படிப்புகளில் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் மருத்துவ மேல்படிப்புக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற இருந்த நிலையில், இடஒதுக்கீட்டு வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை கலந்தாய்வை நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







