சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ..!

சென்னை வேளச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பிரதான சாலையில், ஐஐடி கேட் அருகில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது,…

சென்னை வேளச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில், ஐஐடி கேட் அருகில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் புகை வரத் துவங்கியுள்ளது. இதனைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட அக்காரில் இருந்த 4 பேர் உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளனர். ஆனால், காரில் தொடர்ந்து தீ பரவி எரிந்துள்ளது. இதனால், வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

அண்மைச் செய்தி: ‘ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்; முதலமைச்சர் அறிவிப்பு’

இந்நிலையில், தகவலறிந்து வந்த வேளச்சேரி தீயணைப்புத் துறையினர் தீயைப் போராடி அணைத்தனர். அப்போது மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தது பிரசன்ன வெங்கடேஷ் என்பதும், அவருடன் அவரது தந்தை பாலாஜி, மற்றும் உறவினர்கள் ஆனந்த், காமாட்சி ஆகியோர் திருமண நிகழ்விற்காகத் திருச்சியிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டுத் திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்துக் கிண்டி போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.