திருப்பூரைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் 12ம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை எடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 23,559 பேர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் மொத்தம் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நினைவில் கூறத்தக்க 12ம் வகுப்பு பொதுத் தேர்வு புள்ளி விபரங்களில் ரோகித் ராஜா, ரோஷன் ராஜா எடுத்த மதிப்பெண்ணும் சேர்ந்துள்ளது.
திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.அவருக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் இரட்டை பிறவிகள். திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர்கள் இருவரும் எடுத்த மதிப்பெண்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இருவரும் 600க்கு 417 மதிப்பெண்கள் எடுத்து மதிப்பெண்கள் எடுப்பதில்கூட தங்கள் ஒற்றுமையை காட்டியுள்ளனர்.
நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருந்து இரட்டையர்கள் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் மதிப்பெண்கள் எடுப்பதிலும் இப்படி ஒரு ஒற்றுமையா என ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா குறித்து அவரது பெற்றோர், சக மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வியந்துள்ளனர். நேற்று முன்தினம் வெளியான 10, 12ம் வகுப்பு பொது தேர்வில் ஆச்சர்யங்களை ஏற்படுத்திய இலக்கங்களில், ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா எடுத்த 417 என்கிற மதிப்பெண்ணும் இணைந்துள்ளது.







