ஐக்கிய அமீரக விண்வெளி வீரரான சுல்தான் அல் நையாதி விண்வெளியில் இருந்து வெளியிட்ட இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான சுல்தான் அல் நையாதி, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். ஆறு மாத காலத்திற்கு விண்வெளி பயணத்தை திட்டமிட்டு அவர் விண்வெளியில் இருந்து வருகிறார். விண்வெளியில் இருந்து அவ்வபோது விண்வெளி , பூமியின் நிலப்பரப்பு உள்ளிட்ட படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி விண்வெளியில் இருந்து இமயமலையின் பனி மூடிய அழகாக காட்சியளிக்கும் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த படங்களை பகிர்ந்த சுல்தான் அல் நையாதி தெரிவித்ததாவது..
“விண்வெளியில் இருந்து இமயமலையின் தோற்றம் இது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடமான எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம்தான் இமயமலை. நமது கிரகத்தில் இந்த மலைகள் இயற்கையின் அடையாளங்களில் ஒன்றாக காட்சியளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 15ம் தேதி வட மாநிலங்கள் முழுக்க பிபர்ஜாய் புயல் கொடூர தாண்டவமாடிய நிலையில் சுல்தான் அல் நையாதி விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயல் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுல்தான் அல் நையாதி தற்போது எடுத்துள்ள இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்கள் பலராலும் பாராட்டைப் பெற்று வருகின்றன.
https://twitter.com/Astro_Alneyadi/status/1690348989177024512







