பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த முன்னாள் மாணவியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் சர்வதேச பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் மாணவி மின்னஞ்சல் மூலமாக அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் தொல்லை அளித்தாக சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த முன்னாள் மாணவியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்துவைத்தார்.







