சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஹைதராபாத் இளைஞருக்கு நூதன நிபந்தனை தண்டனை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த மாதம் 8ஆம் தேதி அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஒருவர் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஹாரிஸ், முகமது சைபான் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா அலெக்ஸ் பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து பினோய் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நூதன நிபந்தனை ஒன்றை வழங்கி உள்ளார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
குறிப்பாக மூன்று வாரங்களுக்கு திங்கள்கிழமை காலை 9:30 மணி முதல் 10:30 மணி
வரையும் மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையும் விழிப்புணர்வு பிரசுரங்களை
தேனாம்பேட்டை சிக்னலில் வழங்க வேண்டும். செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை ஐந்து நாட்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் வார்ட் பாயாக
தினமும் காலை எட்டு மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் பணியாற்ற வேண்டும்
எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் இன்று காலை பினோய் அண்ணா அறிவலயம் அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.