வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், காணும் பொங்கல் அன்று , பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம், ஏராளமான பெண்கள் முறத்தடி வாங்கி பேய் விரட்டும் வழிபாட்டில் பங்கேற்றனர்.
வித்தியாசமான திருவிழாக்கள், வியப்பூட்டும் வழிபாட்டு முறைகளுக்கு பெயர் பெற்ற வாழப்பாடி பகுதியில் உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், பொங்கல் பண்டிகை தருணத்தில் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விளையாட்டுகளான மஞ்சுவிரட்டு, எருதாட்டம், கபடி போட்டி , வழுக்கு மரமேறுதல் போன்ற போட்டிகள் மட்டுமின்றி நரியாட்டம் என்று சொல்லப்படும் வங்காநரி பொங்கல் ஆகிய வினோத நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், தமிழகத்தின் வெறெந்த பகுதியிலும் இல்லாத வினோதமாக, காணும் பொங்கல் அன்று , முன்னோர்களின் வழியில் பேய் விரட்டும் திருவிழா நடந்து வருகிறது. திருமணம் கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருவதால், நேற்று நடைபெற்ற காணும் பொங்கல் திருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர்.
வித்தியாசமான திருவிழாக்கள், வியப்பூட்டும் வழிப்பாட்டு முறைகளுக்கு பெயர் பெற்ற இந்த பொன்னாரம்பட்டி கிராமத்தில், அதிநவீனத்திற்கு மாறியுள்ள இந்த காலத்திலும் காணும் பொங்கல் தோறும் நடந்தேறி வரும் இந்த பேய் விரட்டும் திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்றாகும். காரணம் பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா நடத்துவதற்காவே பரம்பரை உரிமை கொண்ட பூசாரி குடும்பத்தினர், பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முன்பே, புலால் மறுத்து, காலணிகள் தவிர்த்து விரதமிருக்கின்றனர்.
காணும் பொங்கல் தினத்தன்று பேய் விரட்டுவதற்காக முன்னோர்கள் வடிவமைத்துக் கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு காட்டேரி வேடம் பூண்டு கொண்டு மேள வாத்தியம் முழங்க, பூசாரிகள் ஆற்றங்கரைக்குச் சென்று, அங்கு கூடியிருக்கும் பெண்களை அழைத்து தலைமுடியை கையில் பிடித்துக் கொண்டு மூங்கில் தப்பையால் முடையப்பட்ட முறத்தால் தலையில் 3 முறை அடிப்பார்கள். பிறகு நெற்றியில் விபூதி வைத்து அனுப்பி விடுவார்கள். விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்திய பிறகு பேய் விரட்டும் காட்டேரி வேடமிட்ட இந்த பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால், திருமணம் விரைவாக கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.
காணும் பொங்கல் தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த வினோத விழாவில், ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து வரிசையில் நின்று காத்திருந்து, பூசாரியிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர்.இந்த நிகழ்வு குறித்து அங்கு வசிக்கும் பெண்கள் சிலர் கூறும் போது, இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா தொடர்ந்து நடந்து வருகிறது.
விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யும் பூசாரிகள் முறத்தால் அடிப்பதால், தனக்குள் இருந்த குழப்பமான எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, திருமணம் கைகூடி, நல்ல வரனும், குழந்தை பாக்கியமும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. இதனால் வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களும், காணும் பொங்கலன்று நடைபெற்ற பேய் விரட்டும் வினோத திருவிழாவில் சொந்த கிராமத்திற்கு வந்து பூசாரிகளிடம் சென்று பேய் விரட்டிக் கொள்கின்றனர்.