33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட புயல் – ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் இன்று.!

நாடுகளின் எல்லை தாண்டி இசையால் இதயங்களைக் கட்டிப்போட்ட தமிழன்.,  தன்னுடைய இசையால் தமிழுக்கும், தேசத்திற்கும் மகுடம் சூட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர்களை ஆட்கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த  செய்தித் தொகுப்பைக் விரிவாக காணலாம்.

அமெரிக்க மண்ணில், உலகமே உற்று நோக்கிய மேடையில் கையில் இரண்டு ஆஸ்கர்களை ஏந்தி, தன்னுடைய தாய் மொழிக்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்த  ஏ.ஆர்.ரஹ்மான் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்கிற வார்த்தையை உதிர்த்தார்.  அந்த மேடையை அடைய ஏ.ஆர்.ரஹ்மான பல கரடு முரடான பாதைகளை கடக்க வேண்டி இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

   புதிய பையன், என்ன தெரிந்து விடப்போகிறது..,  கத்துக்குட்டி , பாரம்பரிய இசையில் நிலைக்க முடியாது இப்படித்தான் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து, ரோஜா படம் வெளியான புதிதில் சிலரின் எண்ணம் இருந்தது. ஆனால் தன்னுடைய திறமை, மற்றும் முயற்சியின் மீது கொண்ட நம்பிக்கை, அவருக்கு எதிராய் வன்மம் கக்கியவர்களை மாற்றிப் பேச வைத்தது.

தமிழ்நாட்டின் இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த காலம். அப்போது மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைக்க, இயக்குநர் கே.பாலசந்தர் ஏ.ஆர்.ரஹ்மானை பரிந்துரை செய்தார். கவிதாலயா பிலிம்ஸின் ரோஜா திரைப்பட பாடல்கள் வெளியாகி யார் இந்த ஏ.ஆர்.ரஹ்மான என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1992 ஆம் ஆண்டு ரோஜா பட கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தது தனிக்கதை.

இயக்குநர் சங்கரின் அறிமுகப்படம் ஜெண்டில் மேன். அந்த படத்தில் ரஹ்மானோடு கை கோர்த்த சங்கர், அதன்பின் தொடர்ந்து இயக்கிய 5 படங்களில்,ஏ.ஆர்.ரஹ்மோனோடு இணைந்து பயணித்தார். அத்தனை படங்களும் இசையில் அதிரி புதிரி ஹிட் அடித்தவை.

காதலன் படத்தில் முக்காலா முக்காபுலா,  இந்தியன் படத்தில் கப்பலேறி போயாச்சு,
ஜீன்ஸ் படத்தில் அன்பே அன்பே கொல்லாதே.. முதல்வன் படத்தில் குறுக்கு சிறுத்தவளே,
பாய்ஸ் படத்தில் காதல் சொன்ன கணமே என ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அத்தனை படங்களிலுமே பாடல்கள் ஹிட் அடித்தன.

ஏ.ஆர்.ரஹ்மானால் மேற்கத்திய இசையை மட்டுமே தர முடியும் எனும் விமர்சனத்தை தவிடு பொடியாக்கியது கிழக்குச்சீமையிலே பாடல்கள். மானூத்து மந்தையிலே, எதுக்கு பொண்டாட்டி போன்ற பாடல்கள் பாரம்பரிய மற்றும் கிராமிய இசையில் புதி உத்வேகத்தை அளித்தன.

இசை மட்டுமல்லாது தன்னுடைய குரலாலும் மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் ரஹ்மான். அந்தக் குரலுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் – HIS VOICE DESERVES. அவர் இடையமைத்து பாடிய JAI HO பாடல், அந்த அரபிக் கடலோரம், முஸ்தஃபா போன்ற பாடல்கள் மூலம் அவரது குரலுக்கு தனி ரசிகர்களை தேடித் தந்தது.

தமிழ்நாட்டில் கலக்கிக் கொண்டிருந்த ரஹ்மானின் பாடல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்ப்பட்டு இருந்தாலும், நேரடியாக ரங்கீலா திரைப்படம் மூலம் பாலிவுட்டிற்கு அவரை அழைத்துச் சென்றவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாதான்.

இந்திய மொழிகளை ரஹ்மானின் இசை அலங்காரம் செய்ததைப் பார்த்த ஹாலிவுட்டும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஸ்லம் டாக் மில்லினியர் உள்ளிட்ட படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசையில் தனக்கென தனிமேடை அமைத்துக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று.. ஹம்மிங் மட்டுமே வைத்து உருவாக்கிய ராசாத்தி என் உசுரு பாடல். இயக்குநர் சங்கர், மணிரத்னம் உள்ளிட்டோரின் முதல் சாய்ஸாக ஏ.ஆர்.ரஹ்மான் இன்றளவும் இருக்க அவர் உருவாக்கும் மெட்டுகள் மட்டுமல்லாது, பின்னணி இசையும் முக்கிய காரணம்.

அதேபோல பின்னணிப் பாடகர்களான சித் ஸ்ரீராம், சுக்வீந்தர் சிங், சின்மயி, கார்த்திக், நரேஷ் ஐயர் போன்ற இளையவர்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த ஏ.அர்.ரஹ்மானின் சமீபத்தில் வடிவேலுவின் மேஜிக் குரலில் வெளியான மலையிலதான் தீப்பிடிக்குது ராசா மற்றும் தேவாவின் குரலில் நெஞ்சமே நெஞ்சமே பாடல்கள் ரசிகர்களை கிறங்கடித்தன.

மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க தேவையில்லை என்கிற சொலவடை புலக்கத்தில் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் தந்தை ஆர்.கே.சேகரின் இசைப்பயணத்தில் உச்சம் தொட்டவர் ரஹ்மான். அதேபோல ரஹ்மானின் மகன் அமீனும் தனது வசீகர குரலால் தந்தைக்குப் பெருமை சேர்த்து வருகிறார். இன்று ஏ.ஆர்.ரஹ்மானோடு அவரது மகன் அமீனும் பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரஹ்மான் எனும் இசைப்புயல் ஆஸ்கர், தேசிய விருது உட்பட 175 விருதுகளை பெற்று ஆசியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் என்கிற சாதனையும் படைத்துள்ளார்.

– அருள் முருகன் , நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading