காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பைத்தியக்காரத்தனம் என்றும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார்.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர். இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர். ஹமாஸ் இஸ்ரேலிய பிரதேசத்தை தாக்கி 229 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
எனவே வான் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் இப்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 3,000 குழந்தைகள் உட்பட 7,300 க்கும் அதிகமானோர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கை பைத்தியக்காரத்தனம் என்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். காஸா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல, அது ஒரு விடுதலை அமைப்பு என்று எர்டோகன் கூறியிருந்தார். மேலும் அவர் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க உலக வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப நாட்களாக பாலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.







