மாநிலத்தில் உள்ள கட்சிகளுக்கும் நாட்டை ஆளக்கூடிய ஆசை வந்துள்ளதாலேயே I.N.D.I.A கூட்டணி உருவாகியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டிற்கு பல கோடி ரூபாய் சேமிக்க முடியும்
என்றார்.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு மட்டுமல்ல மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகளும் உயரும், இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடையும் என்றார். ஒரே நாடு ஒரே தேர்தலின் தொடர்ச்சியால் இந்தியாவை பாஜக அரசு வல்லரசாக மாற்றக்கூடிய நல்ல சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அமைத்துள்ள குழு நல்ல முறையில் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள கட்சிகளுக்கும் நாட்டை ஆளக்கூடிய ஆசை வந்துள்ளதாகவும், அதனாலாயே I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள் எனவும் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சிகளின் அணி மக்களிடம் பொய்யான ஊழல் புகாரை கூறி திசை திருப்புகிறார்கள் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான அணி நிச்சயமாக 100% வெல்லும் என்றும் இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் பாஜக மீதான ஊழல் புகாரினால் திமுக தன் மீது சேற்றினை பூசிக்கொள்கிறது என்றும், தமிழக ஆட்சியாளர்கள் பற்றி மக்களுக்கு தெரியும் என்றும் அவர்கள் ஊழலை பற்றி பேசுவது எங்குமே எடுபடாது என்ற அவர் ஊழலை தொடரவேண்டும் என்பதற்காகவே சனாதானத்தை ஒழிப்பதாக பேசுகிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதில் N.D.A கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் ஊழல்வாதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.







