சேலத்தில் வரும் 28ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஸ்டாலின், ராகுல் ஒரே மேடையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதில், திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இதனால், தமிழகத்தில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த தேர்தலில் மொத்தமாக 4,061 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். முன்னதாக பிரதமர் மோடி 2 முறை தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், வரும் 30ம் தேதி அவர் மீண்டும் தமிழகம் வரவுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுவரை 3 முறை தமிழகத்திற்கு வருகைபுரிந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் வரும் 28ம் தேதி சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பரப்புரை நிகழ்த்த உள்ளார். மேலும், திருமாவளவன், வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியதுள்ளது.







