ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஐந்து கருடசேவை கோலாகலமாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா 14 ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தினமும் இரவு ஸ்ரீஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளான நேற்று (18.07.2023) இரவு ஐந்து கருடசேவை நடைபெற்றது
முதலில் சிறிய அன்ன வாகனத்தில் பெரியாழ்வார் எதிர் கொண்டு அழைத்துச் செல்ல, கருட வாகனத்தில் ரெங்கமன்னார் பவனி வந்தார். தொடர்ந்து பெரிய அன்ன வாகனத்தில் ஸ்ரீஆண்டாளும், கருட வாகனங்களில் முறையே பெரிய பெருமாள், ஸ்ரீனிவாசப் பெருமாள், சுந்தராஜ பெருமாள், திருத்தங்கல் அப்பன் பெருமாள் ஆகியோர் பவனி வந்தனர்.
விடிய விடிய நடைபெற்ற வீதி உலாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ரதவீதிகளிலும், மாடவீதிகளிலும் பக்தர்களின் ஆடல்களும், பாடல்களும்,
பக்தி கோஷங்களும் களைகட்டியது







