தமிழர் ஒருவர் பிரதமரானால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அமைச்சர் ரமேஷ் பத்திரனா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராகவும், அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் மக்கள் கிளர்ச்சி வெடித்தது, இந்த போராட்டத்தில் ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அந்நாட்டு மக்கள் ஒன்றாக கலந்துகொண்டனர். இறுதிக்கட்டப் போரின்போது தமிழர்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச அரசு நிகழ்த்திய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தவறிவிட்டோம் என்ற ஆற்றாமையை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை போராட்டத்தின்போது சிங்களர்கள் சிலர் ஏந்தியிருந்தனர்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இலங்கையின் கல்வித்துறை அமைச்சரும் சிங்களருமான ரமேஷ் பத்திரனா தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபரின் அறிக்கை தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரமேஷ் பத்திரனா, அதிபரை மாற்றுவதற்காக இலங்கையில் நடந்த போராட்டத்தின்போது பல நல்ல விஷயங்கள் அரங்கேறியுள்ளதாக குறிப்பிட்டார். 21ம் நூற்றாண்டுக்கும் பொருந்தும் வகையில் ஜாதி, மத, இன பேதங்களை மறந்து மக்கள் ஒன்றிணைந்தது போராட்டத்தின் பிரதான அடையாளமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இன, மத, சாதிய வாதங்களுடன் 21ம் நூற்றாண்டை நோக்கி முன்னேற முடியாது எனக் கூறிய ரமேஷ் பத்திரனா, இன, மத, சாதிய வேறுபாடுகள் அற்ற இலங்கையை உருவாக்க வேண்டும் என்றால், அந்நாட்டு அரசியல்வாதிகளின் மன நிலையில் மாற்றம் வரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இலங்கை பிரதமர் இருக்கையில் தமிழர் ஒருவரோ அல்லது இஸ்லாமியர் ஒருவரோ வந்து அமர்ந்தால், அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அந்த மன நிலை இன்னும் இலங்கையில் உருவாகவில்லை எனக் கூறிய ரமேஷ் பத்திரனா, அந்த ஒற்றுமையை உருவாக்க இலங்கை அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டியது அவசியம் என்றார். இழப்புகளை சந்திக்க நேரிட்டாலும் இந்த மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியம் எனக் கூறிய இலங்கை கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரனா, அதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை என்றார்.