மேலோட்டமாக பார்த்தால் இதில் ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை என்பது போல் தோன்றும் . தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்தால் தான் குடும்ப வன்முறை அல்ல. பேசாமல் , தன்னை ஒரு பொருட்டாக நினைக்காமல், நல்ல உணவுக்கு கூட ஏங்கும் நிலையில் பெண்களை தள்ளினால் அதுவும் குடும்ப வன்முறை தான் . வீட்டிலிருக்கும் சக மனுஷியை மதித்து பேசாமல் நிராகரிப்பதும் ஒரு கணவருக்கான எந்த பொறுப்பும் இல்லாமல் அவளை நிர்க்கதியாக விடுவதும் வன்முறை தான் . இப்படியான குரூரமாக அரங்கேறும் வன்முறைகளை பெண்கள் சொல்வதே இல்லை. பெரும்பாலும் இது போகப் போக சரியாகும் சரியாகும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் மனிதியாக மதிக்காத ஒரு நபருடன் எப்படி தன் வாழ்வின் சுகதுக்கங்களை பகிர்வது என்பது மிகப் பெரிய கேள்வி . இயந்திரத்தனமான இந்த வாழ்க்கைக்கு குடும்பத்திற்காக , உறவுகளுக்காக என்று பழகிக் கொள்கிறார்கள் பெரும்பாலான பெண்கள் . இது போன்ற குரூர எண்ணத்துடன் நடந்தேறும் வன்முறைகள் குறித்து சட்டங்களில் இன்னும் தெளிவில்லை. அது தான் இந்த குரூரமான எண்ணம் கொண்ட வன்முறையை கையில் எடுக்கும் ஆண்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது. இப்படியான வன்முறைகள் தொடங்கி அடித்தல், உதைத்தல் ,அவமானப்படுத்துதல் என பல வழிகளில் பெண்கள் தங்களது கணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் வன்முறைக்கு ஆளாகிறார்கள் .இது ஒரு புறம் என்றால், காதலித்து ஒன்றாக குடும்பம் நடத்திய காதலியை கொன்று அவரது உடலை கண்டம் துண்டமாக வெட்டி நாள் கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தி அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்த அஃப்தாப், ஷ்ரத்தா வாக்கர் (Shraddha Walker) சம்பவம் இந்தியாவை குலை நடுங்க வைத்துள்ளது. இவ்வளவுக்கும் 2020 ம் ஆண்டே அஃப்தாப் மீது ஸ்ரத்தா வாக்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் . பெற்றோரை எதிர்த்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் அஃப்தாப் அடித்தது, வெட்டிக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியது என எல்லாவற்றையும் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார் . ஆனாலும் யாரும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையோ என்பது தான் இப்போது அவரது கொலை உணர்த்தும் செய்தி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
- சுகிதா சாரங்கராஜ்