



இல்லற வாழ்க்கையின் அடிப்படைப் பண்பான, அன்பாக வாழ மறுப்பதோடு, கேள்வி மேல் கேள்வி கேள்வி கேட்பதே, ஒரு கட்டத்தில் காவியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியது. அதனால் பிடித்த உணவை வாங்கி சாப்பிடுவதையும் நிறுத்திக் கொண்டார். வீட்டிற்கு உங்கள் அம்மா ,அப்பா வரக் கூடாது என்று கட்டளையிட்டார் சித்தார்த். தனது அப்பா, அம்மாவைக் கூட வீட்டிற்கு வரக் கூடாது என்று சொன்னவுடன் காவியா தனது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார். அப்போது சித்தார்த், காவியாவை அடித்து , கழுத்தை நெறித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் உடலாலும், மனதாலும் நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் காவியா. ஒரு கட்டத்தில், இப்படியும் ஒரு வாழ்க்கை தேவையா என்ற மனநிலைக்கு வந்த காவியா, பொறுத்தது போதும் என்று கிளம்பி அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பிவிட்டார். காவியாவிற்கு நடந்தது போன்று பெண்கள் மீது நடத்தப்படும் குரூர எண்ணம் கொண்ட வன்முறைகள் கணக்கிலேயே வருவதில்லை. 
மேலோட்டமாக பார்த்தால் இதில் ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை என்பது போல் தோன்றும் . தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்தால் தான் குடும்ப வன்முறை அல்ல. பேசாமல் , தன்னை ஒரு பொருட்டாக நினைக்காமல், நல்ல உணவுக்கு கூட ஏங்கும் நிலையில் பெண்களை தள்ளினால் அதுவும் குடும்ப வன்முறை தான் . வீட்டிலிருக்கும் சக மனுஷியை மதித்து பேசாமல் நிராகரிப்பதும் ஒரு கணவருக்கான எந்த பொறுப்பும் இல்லாமல் அவளை நிர்க்கதியாக விடுவதும் வன்முறை தான் . இப்படியான குரூரமாக அரங்கேறும் வன்முறைகளை பெண்கள் சொல்வதே இல்லை. பெரும்பாலும் இது போகப் போக சரியாகும் சரியாகும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் மனிதியாக மதிக்காத ஒரு நபருடன் எப்படி தன் வாழ்வின் சுகதுக்கங்களை பகிர்வது என்பது மிகப் பெரிய கேள்வி . இயந்திரத்தனமான இந்த வாழ்க்கைக்கு குடும்பத்திற்காக , உறவுகளுக்காக என்று பழகிக் கொள்கிறார்கள் பெரும்பாலான பெண்கள் . இது போன்ற குரூர எண்ணத்துடன் நடந்தேறும் வன்முறைகள் குறித்து சட்டங்களில் இன்னும் தெளிவில்லை. அது தான் இந்த குரூரமான எண்ணம் கொண்ட வன்முறையை கையில் எடுக்கும் ஆண்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது. இப்படியான வன்முறைகள் தொடங்கி அடித்தல், உதைத்தல் ,அவமானப்படுத்துதல் என பல வழிகளில் பெண்கள் தங்களது கணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் வன்முறைக்கு ஆளாகிறார்கள் .
இது ஒரு புறம் என்றால், காதலித்து ஒன்றாக குடும்பம் நடத்திய காதலியை கொன்று அவரது உடலை கண்டம் துண்டமாக வெட்டி நாள் கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தி அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்த அஃப்தாப், ஷ்ரத்தா வாக்கர் (Shraddha Walker) சம்பவம் இந்தியாவை குலை நடுங்க வைத்துள்ளது. இவ்வளவுக்கும் 2020 ம் ஆண்டே அஃப்தாப் மீது ஸ்ரத்தா வாக்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் . பெற்றோரை எதிர்த்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் அஃப்தாப் அடித்தது, வெட்டிக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியது என எல்லாவற்றையும் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார் . ஆனாலும் யாரும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையோ என்பது தான் இப்போது அவரது கொலை உணர்த்தும் செய்தி.





இந்தியாவில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளும், வழக்குக்கு வழக்கு மாறுபட்ட தீர்ப்பை கொண்டிருக்கிறது. கணவனாகவே இருந்தாலும் மனைவியின் அனுமதி இல்லாமல் அவளை தொட்டால், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினால் குற்றம் என்று ஒரு தீர்ப்பு. மற்றொரு புறம் கணவன் மனைவியை தொட்டால் தவறில்லை என்று வரும் தீர்ப்பு, திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றினால் தவறு என ஒரு தீர்ப்பு. திருமணம், சத்தியத்தை நம்பி பெண்கள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்று மற்றொரு தீர்ப்பு. இப்படி வழக்குக்கு வழக்கு தீர்ப்புகள் மாறுபடுகின்றன . அதனால் நீதிபதிகள் குடும்ப வன்முறை வழக்குகளில் தீர்ப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம். 
தன்னுடன் வாழ்பவரும் சக மனிதர் தான். அவருக்கும் உணர்வுகள் இருக்கிறது. அடித்தால் திருப்பி அடிக்கக் கூடிய தெம்பும் இருக்கிறது. ஆனால் அதனை அவர் மீறாததற்கு அன்பு, குடும்ப கட்டமைப்பு உள்ளிட்டவை தான் காரணம் என்பதை இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஆண்கள் இந்த நேரத்தில் உணர்தல் அவசியம். தவறு யார் செய்தாலும் தவறு தான். தவறு செய்தவர்கள் உடனடியாக திருந்தி, அதற்கு வருந்தி, ஒருவருக்கு ஒருவர் புரிந்து, வாழ்ந்தால் மட்டுமே குடும்ப வன்முறைகள் பெருகாமல் குறையும். இப்படி எதார்த்தத்தை உணர்த்தும் வாழ்வியலுக்கு சிறு வயதிலிருந்தே ஆண் பிள்ளைகளை பழக்கினால், வருங்காலத்தில் குடும்ப வன்முறைகளை குறைக்க உதவும்.- சுகிதா சாரங்கராஜ்







