ஸ்குவிட் கேம் வெப் சீரிஸை தழுவி சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த செல்வம் ஆறுமுகம் என்பவர் 11 லட்ச ரூபாயை வென்றுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான ‘ஸ்குவிட் கேம்’. ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது.
பணத்தேவை உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு குழுவால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெல்லும் ஒரு நபருக்கு பல நூறு கோடிகள் பரிசாக அளிக்கப்படும். தோற்கும் வீரர்கள் வீட்டிற்குச் செல்லலாமா? இல்லை. அங்கேயே சுட்டுக்கொல்லப்படுவார்கள். ஒவ்வொரு நிமிடமும் பதற்றமான ஆக்கத்துடன் மொத்தம் 400 வீரர்கள் விளையாடும் கதையே ‘ஸ்குவிட் கேம்’ இணையத் தொடர்.
இந்நிலையில், ஸ்குவிட் கேம் வெப் சீரிஸை தழுவி சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த செல்வம் ஆறுமுகம் என்பவர் 11 லட்ச ரூபாயை வென்றுள்ளார். பொலிசம் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் நடத்திய போட்டியில் அதே நிறுவனத்தை சேர்ந்த செல்வம் தடைகளை தாண்டி வெற்றியைப் பதித்துள்ளார்.







