ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள், சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வர தமிழ்நாட்டை சேர்ந்த 101 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்தில் மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை சென்னை அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் பாதராக் பகுதியில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் பிரம்மாபூர் , விசாகப்பட்டினம் , ராஜமுந்திரி , விஜயவாடா வழியாக நாளை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் புவனேஸ்வருக்கு செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.