2023-24-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் அளித்து சாதனை படைத்துள்ளன.
இது குறித்து மத்திய அரசின் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு, இந்திய மாநிலங்களின் பொருளாதார செயல் திறன் 2023-2024 என்ற பெயரில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பங்களிப்பு வெகுவாக உயர்ந்துள்ளன.
- ஒரு காலத்தில் பெருமளவு ஜி.டி.பி வழங்கிய மேற்கு வங்க மாநிலம் பின்தங்கியுள்ளது.
- கடந்த 1991 ஆம் ஆண்டு வரை தென் மாநிலங்களின் தனிநபர் வருவாய் தேசிய வருவாயை விட குறைந்து இருந்தது. ஆனால், 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கத்துக்கு பிறகு, தென்மாநிலங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன.
- 2024 ஆம் ஆண்டு தென் மாநிலங்களின் ஜி.டி.பி பங்களிப்பு 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
- தமிழ்நாடு தொழில்துறையிலும், கர்நாடகா ஐ.டி துறையிலும் கோலோச்சுகின்றன.
- கடந்த 2014 ஆம் ஆண்டு உருவான தெலங்கானா மாநிலமும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
- ஒரு காலத்தில் ஜி.டி.பியில் 10.5 சதவிகிதம் வழங்கி வந்த மேற்கு வங்கத்தின் பங்களிப்பு தற்போது 5.6 ஆக குறைந்து விட்டது. கடந்த 20 வருடங்களாக மேற்கு வங்க அரசின் தொழில்துறை கொள்கைகளும் அரசியல் நிலவரமும் தொழில்துறையில் அந்த மாநிலத்தை சரிவை நோக்கி கொண்டு சென்றதே காரணம் என கருதப்படுகிறது.
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதத்தை வழங்கி வந்த மகராஷ்டிராவின் பங்களிப்பு 2024 ஆம் ஆண்டு 13.3 சதவிகிதமாக குறைந்து போயுள்ளது.
- தென் மாநிலங்களில் தமிழ்நாடு 8.7 சதவிகிதம், கர்நாடகம் 8.2 சதவிகிதம், கேரளா 3.8 சதவிகிதமும் ஜிடிபி பங்களிப்பை வழங்கி வருகின்றன.
- ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஜி.டிபி பங்களிப்பு 9.7 சதவிகிதமாக உள்ளது.







