கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க பாஜக தலைமையின் பிரதிநிதியாக அருண் சிங் பெங்களுரு வர உள்ளார். முதலமைச்சருக்கான போட்டியில் 5 பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவில், தனது 2 ஆண்டு கால ஆட்சியின் சாதனை குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற எடியூரப்பா, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். 7 முறை தன்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட எடியூரப்பா, பிற்பகலில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தனது விருப்பப்படியே ராஜினாமா செய்ததாகவும், எந்தவித நெருக்கடியும் தரப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜகவில் 75 வயதுக்கு மேல் பொறுப்பு வழங்கப்படாது என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றக்கோரி, கர்நாடக மாநில பாஜக நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் டெல்லியில் பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்த எடியூரப்பா, தற்போது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பா நான்கு முறை முதலமைச்சராகப் பதவி வகித்த போதிலும், ஒரு முறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவின் புதிய முதலமைச்சருக்கான போட்டியில் 5 பேர் உள்ளதாவும் இறுதி முடிவு எடுக்க அம்மாநில பாஜக மேலிட பிரதிநிதி அருண் சிங் இன்று பெங்களூரு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.