போர்தொழில் திரைப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என சோனி லைவ் ஒடிடி நிறுவனம் போஸ்டர் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே அமோக வரவேற்பை பெற்றது. சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் மக்கள் அளித்த ஆதரவின் காரணமாக இப்படம் ஒரு மாதத்தைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போர் தொழில் திரைப்படத்திற்கு அண்மையில் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் . அந்த விழாவில் பேசிய சரத்குமார் இப்படம் ஓடிடியில் வெளிவந்தாலும், திரையரங்கில் நூறு நாட்கள் வரை ஓட வைக்குமாறு தியேட்டர் உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் கேட்டுக்கொண்டார்.
வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்கு பின் ஓடிடியில் வெளியிடப்படும். அந்த வகையில் போர் தொழில் படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் தியேட்டரில் நன்கு வரவேற்பை பெற்று வருவதால், அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைக்குமாறு தயாரிப்பு தரப்பில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓடிடி நிறுவனமும் அப்படத்தின் ரிலீசை தள்ளி வைத்தது.
இதனால் போர் தொழில் திரைப்படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகாது என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் ஒடிடி உரிமத்தை வாங்கியுள்ள சோனி லைவ் நிறுவனம் இந்த திரைப்படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்து போஸ்டர் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.