சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரபரப்பு. காவல்துறையினர் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ.வு.சி நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ராணுவத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு சுமார் 9 மணி அளவில் கைத்துப்பாக்கியுடன் தான் வசித்த பழைய வீடு உள்ள சர்ச் தெரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறார்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போடி நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கி தோட்டா மூலம் வெளியான தோட்டா கப்பியிணை கைப்பற்றி ராணுவ வீரர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ராணுவத்தால் வழங்கப்பட்ட நூறு தோட்டாக்களில் 94 தோட்டாக்கள் மற்றும் கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், இதற்கு முன்னதாக காஷ்மீரில் பணியாற்றிய போது தனது பாதுகாப்பிற்காக நூறு தோட்டாக்களுடன் 1.32mm துப்பாக்கியின் அரசின் அனுமதியுடன் வாங்கியுள்ளார். பின்னர் காஷ்மீரிலிருந்து வெஸ்ட் பெங்காலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையிலும் அந்த துப்பாக்கியை முருகன் பராமரித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து போடியில் உள்ள தனது வீட்டினை மற்றொரு பகுதிக்கு மாற்றுவதற்காக போடிக்கு வந்துள்ளார் முருகன்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தான் வசித்த பழைய வீட்டு பகுதியில் வசித்து வரும் தீனதயாளனின் (22) தந்தை அண்ணாதுரை, முருகனின் தாயார் முத்துலட்சுமியிடம் மதுபோதையில் தகாத வார்த்தைகளை கூறி சண்டையிட்டு உள்ளார். இதனையறிந்த ராணுவவீரர் முருகன் அண்ணாதுரையை மிரட்டும் வகையில் தனது பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட கைத்துப்பாக்கியினை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வானத்தை நோக்கி சுட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த பரபரப்பு அப்பகுதியில் நிலவியது.