30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

சாப்ட்வேர் எஞ்சினீயர் To இயற்கை விவசாயி; சாதித்த சித்ரா தேவி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நஞ்சில்லா உணவை அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் பணியாற்றிய மென்பொருள் துறை பணியை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார் சித்ரா தேவி. அத்துடன், அதனை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சியளித்து வருகிறார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சித்ரா தேவிக்கு சிறு வயதிலிருந்தே விவசாயம் மீது ஆர்வம் இருந்துள்ளது. வீட்டில் முதல் பட்டதாரி பெண்ணான அவர் மென்பொருள் துறையை தேர்ந்தெடுத்து படித்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு  தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியாற்றினாலும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்துக்கொண்டே இருந்துள்ளது. பின்பு துபாயில் பணியாற்றியபோது அங்கு பாலைவனத்தில் கூட விவசாயம் செய்வதை பார்த்து வியந்து, இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சித்ரா தேவிக்கு மீண்டும் துளிர்த்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“இந்தியா திரும்பியவுடன் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருந்தது. ஆனால், போதிய அளவில் நிலம் இல்லை. அதனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அரிசி வாங்கும் சாக்குப் பைகளில் மண்ணை அள்ளி வைத்து தக்காளி, கத்தரிக்காய் போன்ற சின்னச் சின்னச் செடிகளை வளர்த்தேன். பின் கிராமப்புறங்களில் கிடைக்கும் ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம் ஆகியவற்றை உரமாக பயன்படுத்தினேன். செடிகள் நன்றாக வளர்ந்து தேவையான அளவிற்கு காய்கறிகள் காய்த்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்ட சித்ரா தேவி, பின்னர் தன்னுடைய தேடல்களையும் விவரித்தார்.


“சமூக வலைதளங்களில் இயற்கை விவசாயம் பற்றிய நம்மாழ்வார் பதிவுகள் மற்றும் பல பதிவுகளைப் பார்த்து நிறைய தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். முதலில் எனக்கு தெரிந்த விவசாயியிடம் இயற்கை உரம் தயாரித்தல் பற்றிய தகவல்களை சேகரித்தேன். அடுத்தடுத்து பல விவசாயிகளிடம் சென்று அதிகமாக தகவல்களை சேகரித்தேன். எனது குடும்பத்தில் அனைவரும் ஆதரித்து உதவியதால் பசுமை இல்லம் என்ற பெயரில் மணப்பாறையில் இயற்கை உரங்கள் தயாரித்தேன். என் கணவர் எனக்கு பெரிதும் ஆதரவளிப்பத்தால் இப்பொழுது இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறேன்
அதுமட்டுமின்றி மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு அமைத்து கொடுத்து பராமரிக்கும் முறைகளையும் கூறி இயற்கை உரம், பஞ்சகாவியா ,மூலிகை பூச்சி விரட்டி, தேமோர் கரைசல் போன்றவற்றைவிற்பனை செய்து வருகிறோம்” என்று கூறினார்.

மேலும், அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் உள்ள பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்பு அடைய வேண்டும் என எண்ணினேன். அதனால் அவர்களுக்கு தேமோர் கரைசல் , பஞ்சகாவ்யம் போன்றவற்றை தயாரிக்க பயிற்சி அளித்து தயாரிக்கச் செய்து பெற்றுக் கொள்கிறோம். இதன்மூலம் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு மட்டுமின்றி எதிர்கால தலைமுறைக்கும், குழந்தைகளுக்கும் இயற்கை விவசாயம் பற்றியும் தெரியப்படுத்த வேண்டும் என தோன்றியது. இயற்கை உரம் தயாரிப்பது, விதைகளை எப்படி பராமரிப்பது, ஒரு மரம் எப்படி வளர்கிறது என்பதை பற்றியும் பயிற்றுவித்து வருகிறேன். பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று இயற்கை உரங்களை எவ்வாறு பயன்படுத்துவது ? விதைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? என்பது பற்றியும் முன்னோர்கள் பயன்படுத்தி இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். வேளாண் அலுவலகம் மூலமாகவும் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

இயற்கை வேளாண்மை இயற்கை உரங்கள் இதோடு நின்றுவிடாமல் இடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதால் சாலை ஓரங்களில் கிடைக்கும் விதைகளை சேகரித்து விதைப்பந்துகள் தயாரித்து விவசாயிகளுக்கு இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட விதைகளை வழங்கியிருக்கிறேன். குறிப்பாக நாங்கள் வழங்கும் விதைப்பந்துகள் அனைத்தும் பழவகை மரங்களாய் இருக்குமாறு தேர்வு செய்தேன். அவை பறவைகளின் அழிவயும் குறைக்க உதவும் என்பதே இதற்கு காரணம். குழந்தைகளுக்கு விதைகளை பராமரிப்பது பற்றி சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில் அவர்களின் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக விதைகளைக் கொண்ட பென்சில்களை தயாரித்து அவர்களுக்கு வழங்கி வருகிறோம். அந்த பென்சில்களை பயன்படுத்திய பின் அதில் இருக்கும் விதைகளை நட்டு வளர்க்க குழந்தைகளும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்” என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் சித்ரா தேவி.

சிறந்த சமூக சேவகர் விருது, சிறந்த ஆசிரியர் விருது, தமிழ் பசுமை விருது, பெண் சாதனையாளர் விருது, சிங்கப்பெண்ணே விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
“இயற்கை விவசாயம் மட்டுமே எதிர்காலத்தை காக்க இருக்கும் ஒரே வழி. எதிர்காலத் தலைமுறைக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கத்தில், நான் எடுக்கும் ஒவ்வொரு புது முயற்சிகளையும் குழந்தைகளை கருத்தில் கொண்டே இருக்கிறேன்” என்று நிமிர்ந்து நிற்கிறார் சித்ரா தேவி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading