குஜராத் கலவரம் தொடர்பாக பொய் சாட்சிகளை உருவாக்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் மீது தொடப்பட்ட வழக்கில் அவரது ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
குஜராத் கலவர வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் மோடி குற்றமற்றவர் என்று 2022-ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை அடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்கள், சாட்சியங்களை உருவாக்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மீது குஜராத் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
அப்போது ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கும் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். இவ்வழகை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனை அடுத்து குஜராத் சபர்மதி சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் போது இனிமேல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி நிர்ஜார் தேசாய், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மும்பையில் வசிக்கும் தீஸ்தா சீதல்வாட் குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவின் படி சரணடைவார் என தெரிகிறது. அப்படி இல்லையென்றால் அவர் கைது செய்யப்படுவார். இதனிடையே அவர் மீதான வழக்கு விசாரணை வேகம் எடுக்கும் என்று குஜராத் போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







