தன்னைக் கடித்த விஷப் பாம்பை, விவசாயி ஒருவர் கடித்துக் கொன்று பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசா மாநிலம் கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் பத்ரா. இவர் புதன்கிழமை இரவு வழக்கம்போல வயலில் வேலைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு நேரம் என்பதால் கையில் டார்ச் லைட்டுடன் வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஏதோ கடித்தது போல இருந்தது. லைட்டை அடித்துப் பார்த்தார். பாம்பு ஒன்று கடித்துவிட்டு வேகமாக ஓடியது. அதை விரட்டிய கிஷோர், கம்பால் அமுக்கிப் பிடித்தார். அது விஷபாம்பு என்பது தெரியவந்தது.
உடனடியாக ’என்னையாவா கடிக்க? உன்னைய என்ன பண்றேன் பார்’என்று அப்படியே பலமுறை கடித்து கொன்றுவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் விஷயத்தை சொன்னார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காண்பிக்குமாறு கூறினர். ஆனால் அவர் போக மறுத்து நாட்டு வைத்தியரைச் சந்தித்து மருந்து வாங்கினாராம். நல்லவேளையாக அவருக்கு ஏதும் ஆகவில்லை.







