விசாரணை அமைப்புகளை அச்சுறுத்துகிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இராணி

அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக ராகுல் காந்தி கண்டன பேரணி நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக ராகுல் காந்தி கண்டன பேரணி நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை அமைப்பில் ஆஜராகும் முன், தனது படை பலத்தை நிரூபிக்கும் வகையில் ராகுல் காந்தி பேரணி நடத்தி இருப்பது, விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டினார்.

சட்டத்திற்கு முன் யாரும் மேலானவர் கிடையாது என தெரிவித்த ஸ்மிருதி இராணி, ஊழல் செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என குறிப்பிட்டார்.

யங் இந்தியா நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரர்களாக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்மிருதி இராணி, நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது ஏன் என கேள்வி எழுப்பினார்.

காந்தி குடும்பத்தின் வசம் உள்ள ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே, காங்கிரஸ் கட்சியின் போராட்டம் அமைந்திருந்ததாக அவர் விமர்சித்தார்.

நாட்டில் உள்ள எந்த ஒரு அரசியல் குடும்பமும், விசாரணை அமைப்பை அச்சுறுத்தும் நோக்கில் இதுபோல் நடந்து கொண்டதில்லை என தெரிவித்த ஸ்மிருதி இராணி, தாங்கள் செய்த ஊழல் அம்பலப்பட்டுவிட்டதை மறைக்கவே காந்தி குடும்பம் இதை அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.