தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருவதாக அந்தக் கட்சியின் நிர்வாகி பார்த்தசாரதி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ஆம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 16 ஆம் தேதி உடல் பரிசோதனைக்குப் பின்பு தனது வீட்டிற்கு திரும்பி இருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக, கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமைக் கழக அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரை
பிரபலங்கள் உள்ளிட்டோர் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து இருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அழைத்து விஜயகாந்த்
உடல்நலம் குறித்து விசாரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறுவை சிகிச்சைக்குப் பின்பு நலமுடன் இருப்பதாகவும், வீடு திரும்ப உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி DD info & RR news ஆகிய யூடியூப் சேனல்கள் வதந்திகளை பரப்பியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் டி.ஜி.பி அலுவகத்தில் தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி இன்று புகார் அளித்துள்ளார். மேலும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








