நியூ சினிமாவின் டான் – வாலியில் தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா திரை பயணம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்…
இயக்குநராகவும், நடிகராகவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் எஸ்.ஜே.சூர்யா என்று அழைக்கப்படும் எஸ்.ஜஸ்டின் செல்வராஜ். 1999ம் ஆண்டு வெளியான வாலியில் தொடங்கிய இவரது திரை வாழ்க்கை இன்று உச்சத்தை எட்டி நிற்கிறது. இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நபராக விளங்குபவர் எஸ்.ஜே.சூர்யா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 1968ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி பிறந்த இவர் தான், இன்று தென்னிந்திய சினிமாவையே தன்பக்கம் திரும்பி பார்க்கச் செய்திருக்கிறார். இயற்பியலில் பட்டப்படிப்பு முடித்திருந்தும், பொறியியல் படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தும் சினிமா மீதான ஆர்வத்தால் சென்னையிலேயே தங்கினார்.
இயக்குநர் பாக்யராஜிடம் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி பின்னர் ஆசை படத்தில் இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். கிழக்குச் சீமையிலே, ஆசை போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்து, இன்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்.
வாலி, குஷி என அடுத்தடுத்து தல, தளபதியை வைத்து வெற்றி படங்களை தந்த எஸ். ஜே.சூர்யா, நியூ, அன்பே ஆருயிரே படங்கள் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். தான் இயக்கி நடித்த படங்கள் மூலம் பெரிய வெற்றியை பெற முடியாமல் தவித்து வந்தார். அந்த சமயத்தில் பலரும் வியக்கும் வண்ணம் தனது மொத்த திறமையும் வெளிப்படுத்தும் விதமாக இசை என்ற வெற்றி படத்தை தந்தார். அதில் அவரது நடிப்பு இன்றும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இசை படத்துடன் இயக்கத்திற்கு முழுக்கு போட்ட எஸ்.ஜே.சூர்யா, முழு நேர நடிகர் அவதாரம் எடுத்தார். வில்லன்களும் வியந்து பார்க்கும் அளவிற்கு, தனது விசித்திரமான நடிப்பால் அனைவரையும் விழிபிதுங்கச் செய்திருப்பார். சுடலையாக, ஸ்பைடர் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
இப்படி மாறுபட்ட கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து அதில் நடிக்காமல், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பது இவரின் தனிச்சிறப்பாகும். ” இருக்கு ஆனா இல்ல, வந்தான்..சுட்டான்.. செத்தான், repeat, டேய் சும்மா இருடா ” போன்ற, இவரது வசனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கின்றன. வில்லன் வேடத்திலும் தனது நடிப்பால் வித்தியாசத்தை புகுத்தியிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் 54வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.
-தனலட்சுமி