போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிற்கு, மேலும் ஒரு வழக்கில் செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுளளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் மகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை, போக்சோ சட்டத்தின்கீழ், கடந்த ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது மூன்று போஸ்கோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிவசங்கர் பாபா-விற்கு இரண்டாவது போஸ்கோ வழக்கில் சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் அந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரை போலீசார் மீண்டும் சிறையிலடைத்தனர். மீதமுள்ள வழக்கிலும் அவருக்கு ஜாமீன்கேட்டு, வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.







