திருவாரூர் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. தென்காளகஸ்தி என அழைக்கப்படும் இந்த கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற தலங்களில் 59-வது தலமாக விளங்குகிறது.
முற்காலத்தில் ஆதிசேஷன் தனது சாபத்தை போக்கிக்கொள்ள இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் மகா சிவராத்திரியன்று 3-வது காலத்தில் நடைபெறும் பூஜையில் இத்தல இறைவனை வணங்கி சாப விமோசனம் அடைவாய் என வரம் அளித்த இடம் திருப்பாம்புரம் என கூறப்படுகிறது. இதை போல ராகுவும் -கேதுவும் ஏக சரீரமாக இருந்து இத்தல இறைவனை இதயத்தில் வைத்துபூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக் கோயிலில் நாளை மதியம் 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.
இதனையொட்டி ராகு- கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வாழிபாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோயில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.