ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதன் முழுமையான மரபுவரிசை (டிஎன்ஏ) உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரிட்டன் வாழ் தமிழக விஞ்ஞானி சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரக பணிப்புரிந்து வருபவர் சென்னையை பூர்வீகமாக கொண்ட சங்கர் பாலசுப்பிரமணியன்.
இவர் தன் சக பேராசிரியர் டேவிட் க்ளெனர்மேன் (David Klenerman) என்பவருடன் இணைந்து (Solexa Illumina Next Generation DNA Sequencing) என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதனுடைய முழுமையான டிஎன்ஏ மரபுவரிசை உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் மிகச்சரியாகவும் அதேநேரம் பெரும் எண்ணிக்கையிலும் கண்டுபிடிக்க முடியும்.
இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக ஒரு மில்லியன் யூரோ மதிப்பிலான அறிவியல் துறையில் மதிப்புமிக்க விருதான 2020- ம் ஆண்டுக்கான ‘மில்லினியம் டெக்னாலஜி பரிசு’ இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.







